

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். இதையடுத்து, மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள், அரசு அலுவலர்கள் 159 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.