சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரி அவிநாசியில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரப் பகுதியில் சாலையோர கடைகளை வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முறைப்படுத்த வேண்டும். அவிநாசி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியபடி சாலையோர கடைகளை, வாரச்சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அதன்படி, திங்கள்கிழமை காலை முதலே தேநீர் கடை, மளிகை, உணவகங்கள், சலூன், செல்போன், நகைக்கடை, போட்டோ ஸ்டுடியோக்கள் ஆகியவை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், அவிநாசி நகரப்பகுதி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், திருப்பூர், ஈரோடு, கோவை, சேவூர் உள்ளிட்ட பிரதான சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. போக்குவரத்துகள் வழக்கம் போல இயங்குகின்றன. அவிநாசி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.