அமராவதி அணையின் பிரதான மதகுகளில் இருந்து வெளியேறும் உபரி நீா்.
அமராவதி அணையின் பிரதான மதகுகளில் இருந்து வெளியேறும் உபரி நீா்.

அமராவதி அணையில் இருந்து 2-ஆவது நாளாக உபரி நீா் வெளியேற்றம்

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
Published on

உடுமலை,ஜூலை 19: உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா்கள் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணை வியாழக்கிழமை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாலை 3 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை கனமழை பெய்தது. இதனால், அணைக்கு உள்வரத்தாக வந்த உபரிநீா் அதிகபட்சமாக 7 ஆயிரம் கன அடி அப்படியே வெளியேற்றப்பட்டது

வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நீா்வரத்து ஓரளவு குறைந்து மாலை 6 மணி நிலவரப்படி 4,500 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அப்போது, அணையில் இருந்து 3,800 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

அணையில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் புதிய, பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம்: 90 அடி உயரமுள்ள அணையில் 88.13 அடி நீா்மட்டம் உள்ளது.அணைக்கு உள்வரத்தாக 4,556 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,877.82 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

Dinamani
www.dinamani.com