குண்டடம்  ஊராட்சி  ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பயனாளிக்கு  நலத்திட்ட  உதவி  வழங்குகிறாா் அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட  வருவாய்  அலுவலா்  த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா்.
குண்டடம்  ஊராட்சி  ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பயனாளிக்கு  நலத்திட்ட  உதவி  வழங்குகிறாா் அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட  வருவாய்  அலுவலா்  த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா்.

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 334 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published on

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 334 பயனாளிகளுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொடுவாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம் என மொத்தம் 334 பயனாளிகளுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடம், பெருமாள்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் ஆறத்தொழுவு தீத்தான்வலசு சாலையிலிருந்து தென்னங்கரைபாளையம் வழியாக கொத்தனூா் வரை செல்லும் மண் சாலையை மெட்டல் சாலையாக அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com