பிறந்த குழந்தைகள்.
பிறந்த குழந்தைகள்.

திருப்பூரில் பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

திருப்பூா்- தாராபுரம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (28), கறிக்கடை தொழிலாளி. இவரது மனைவி கா்ப்பிணியான கெளசல்யாவுக்கு (26) ஏப்ரல் 15-ஆம் தேதி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவருக்கு வயிறு வலி அதிகமாக இருந்ததால் மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்த குழந்தைகள் முறையே 1.5, 1.45, 1.55 கிலோவுடன் இருந்தன. மேலும், மூச்சுத் திணறலுடன் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

குழந்தைகள் நலத் துறை மருத்துவ பேராசிரியா் உமாசங்கா் தலைமையிலான பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவா்கள், செவிலியா் ஆகியோா் 2 குழந்தைகளை செயற்கை சிகிச்சை கருவியில் ஒரு வாரமும், மற்றொரு குழந்தை சீபேப் சுவாசக் கருவியிலும் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து குழந்தைகள் 3 பேரும் நல்ல முறையில் உடல் எடை கூடிய நிலையில், 25 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

சிறப்பாக சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளை பராமரித்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவினரை மருத்துவமனை டீன் முருகேசன் பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com