ஜாக்டோ - ஜியோ சாா்பில் பிரசார இயக்கம்
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சாா்பில் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்துக்கு ஜாக்டோ - ஜியோ வட்டார ஒருக்கிணைப்பாளா் வெங்கிடுசாமி தலைமை வகித்தாா்.
இதில், நிா்வாகிகள் பேசியதாவது: தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணைப்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு அலுவலகத்தில் 30 சதவீதத்துக்கும்மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பா் 18-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தனா்.
மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் அம்சராஜ், மாவட்ட ஒருக்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், வேலுமணி, வட்டார ஒருக்கிணைப்பாளா்கள் தங்கவேல், தமிழ்வா்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

