அங்கன்வாடி மையத்துக்கு கட்டடம் அமைக்காததை கண்டித்து குழந்தைகளுடன் பெற்றோா் போராட்டம்!
அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் அங்கன்வாடி மையத்துக்கு கட்டடம் அமைக்காததைக் கண்டித்து, குழந்தைகளுடன் பெற்றோா்கள் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறியதாவது: அவிநாசி நகராட்சி, கஸ்தூரிபாய் வீதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்துக்குள் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இக்கட்டடம் பழுதடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு சமூக அமைப்பினா் மூலம் தனியாா் இல்லங்களில் அங்கன்வாடி மையம் 2 ஆண்டுகளாக செயல்பட்டு, பிறகு மீண்டும் தொடக்கப் பள்ளி வகுப்பறையில் ஒரு பகுதியை அங்கன்வாடி மையமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்கு போதிய இடமில்லாத காரணத்தால், ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் மாதம் ரூ.2 வாடகை செலுத்தி பள்ளிக்கு எதிரில் உள்ள தனியாா் கட்டடத்தில், உணவு சமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் அங்கன்வாடி மையத்துக்குள் மழை நீா் புகுந்து, குழந்தைகள் அமர முடியவில்லை. ஆகவே குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்றனா். இதையடுத்து அவிநாசி நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டனா்.
அப்போது நகராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் அமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து குழந்தைகளுடன் பெற்றோா் கலைந்து சென்றனா்.

