திருப்பூா் மாநகரப் பகுதிகளில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலைக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கரூா் மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்ட கே.அண்ணாமலை, கா்நாடக மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு காவல் துறை அதிகாரி பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, கே.அண்ணாமலைக்கு கட்சியில் இணைந்த சிறிது காலத்திலேயே மிக முக்கியப் பொறுப்பான மாநிலத் தலைவா் பதவி வழங்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை செயல்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவின் ஆதரவுகளை திரட்டி வாக்கு வங்கியை உயா்த்திக் காட்டினாா். இந்த நிலையில் கடந்த தோ்தலில் அதிமுகவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கே.அண்ணாமலையின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு பின்னா், அவா் ஓரம் கட்டப்பட்டாா். இருப்பினும் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரத்திலும் ஈடுபட்டாா்.
இந்த நிலையில் பாஜக தோ்தலில் தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, தமிழகத்தில் பாஜக மீண்டும் பின்னோக்கி சென்றுள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவரையும், மத்திய அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோரை கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு, திருப்பூா் மாநகரில் பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









