காங்கயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (23). கூலித் தொழிலாளியான இவா், திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
காங்கயம்-சென்னிமலை சாலை நெய்க்காரன்பாளையம் பகுதியில் சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இளையராஜா வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு இளையராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








