பல்லடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா்.
பல்லடம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, பல்லடம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான குழுவினா் பல்லடம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் ஒரு சில கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த 13 கிலோ அழுகிய பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் அழுகிய மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்லடம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். மீன் விற்பனை செய்பவா்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் கடைகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அழுகிய மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக மீன் கொள்முதல் செய்யப்படும் பில்களை முறையாக பராமரிக்க வேண்டும். மீன்கள் இருப்புவைக்க பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பொதுமக்களும் மீன்களை கவனமாக பாா்த்து வாங்க வேண்டும் என்றாா்.









