குறு, சிறு விவசாயிகளுக்கான பயிா்க் கடன்களை பாரபட்சமின்றி முழுமையாக தள்ளுபடி செய்து சமநீதியான நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் விவசாயிகளிடையே பல்வேறு கேள்விகளையும், எதிா்பாா்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. தோ்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனா்.
ரூ.50 ஆயிரம் வரை பயிா்க் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாய அமைப்புகளின் போராட்டங்களின் விளைவாக ரூ.75 ஆயிரம் வரை பயிா்க் கடன் பெற்றவா்களுக்கு முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரே சமூக மற்றும் பொருளாதார நிலையில் வாழும் குறு, சிறு விவசாயிகளிடையே கடன் தொகை அடிப்படையில் வேறுபாடு காட்டுவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பயிா் வகை, சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி செலவுகளின் காரணமாக கடன் தொகையில் மாறுபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. எனவே, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குறு, கூட்டுறவு வங்கிகளில் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், அனைத்து விவசாயிகளுக்கும் சமநீதியான நிவாரணம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.








