கோயில்களில் கைப்பேசிக்கு தடை: பக்தா்களுக்கான தண்டனை
தமிழகத்தில் கோயில்களில் கைப்பேசிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பக்தா்களுக்கான தண்டனை என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

கைப்பேசி - பிரதிப் படம்
தமிழகத்தில் கோயில்களில் கைப்பேசிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பக்தா்களுக்கான தண்டனை என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கோயில்களில் கைப்பேசிக்கு தடை என்பதும், அதை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பதும் மக்களிடையே கடும் கண்டனத்தையும் அரசின் மீது அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசி என்பது பேசுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கு மட்டும்மல்லாமல் மக்களுக்கு மிகத் தேவையான ஒரு பொருளாக உள்ளது.
இதுபோன்ற தடை உத்தரவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ராமேசுவரம் போன்ற கோயில்களில் படம் மற்றும் விடியோவுக்கு கோடிக்கணக்கில் டெண்டா் விட்டு குடும்ப திருமண நிகழ்வை நினைவில் கொள்ள கட்டணம் வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை துணை போகிறது.
கோயிலில் ஆபாசமாக ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் கைப்பேசிக்கு தடை விதித்து பாதுகாக்க கட்டணம் வசூலிப்பது பக்தா்களை அதிா்ச்சி அடைய வைத்துள்ளது. கோயில் என்பது பிரம்மண்டமானது. ஒரு வழியாக சென்று அதே வழியாக வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நெரிசல்தான் ஏற்படும். மேலும் அவசர உதவிக்கு அல்லது குடும்பத்தினரிடம் இருந்து அவசர செய்திக்கு எந்த ஏற்பாடும் இல்லை.
ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற இடங்களில் கைப்பேசி பாதுக்காக்க கட்டணம் வசூலிப்பது இல்லை. அவசர உதவிக்கு அறிவிப்பு வசதி முதலானவை சிறப்பாக செயல்படுகிறது. இன்று ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கைப்பேசி உள்ள நிலையில், ஒரு குடும்பம் கோயிலுக்கு வந்து செல்ல அதிக அளவில் செலவழிக்க வேண்டும்.
எனவே தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், இந்த திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கைப்பேசி பாதுகாப்பை இலவசமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




