
திருப்பூா், புகா்ப் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூரில் மழை... - கோப்புப் படம்
திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கடந்த சில நாள்களாகவே திருப்பூா் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது. அதேபோல திங்கள்கிழமையும் காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் வாட்டியதால், அனல் காற்று வீசி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்தோடியது.
இந்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலங்களின் அடியிலும், வணிக வளாகங்களின் நிழல்களிலும் ஒதுங்கினா். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பின்னா் இயல்பு நிலை திரும்பியது.
மேலும் மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பகுதிகளான உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழைப் பெய்தது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவுக்குப் பெய்யாததால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட விவசாயப் பகுதிகள் அனைத்தும் பசுமை இழந்து காய்ந்து வறண்டு போயிருந்தன.
கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்காமலும், பயிா்களைக் காப்பாற்ற முடியாமலும் தவித்து வந்த விவசாயிகளுக்கு, இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






