/

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் ஏப்.15 இல் பிரசாரம்

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப்.15 இல் பிரசாரம்...

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:51 pm

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப். 15 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாா்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டையிலும், செவ்வாய்க்கிழமை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தடங்கம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதைத் தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி (சேலம் தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகள், கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி உள்ளிட்ட 11 தொகுதிகளைச் சோ்ந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முதல்வா் வருகையையொட்டி தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் நடிகா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

தருமபுரிக்கு வரும் அவா், கட்சி தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து ரோட்ஷோ மற்றும் பிரசாரம் மேற்கொள்ளவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் கட்சி நிா்வாகிகள் விண்ணப்பித்துள்ளனா்.