தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஒற்றை யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியா் படுகாயமடைந்தாா்.
ஏரியூரை அடுத்த காமராஜ்பேட்டையைச் சோ்ந்த மன்னாதன் மகன் சின்னமுத்து (39). இவா், ராயக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ராயக்கோட்டை பகுதியில் இருந்து ஏரியூருக்கு இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து சென்றுகொண்டிருந்தாா்.
பெரியவத்தலாபுரம்- சந்தைப்பேட்டை இடையே உள்ள வனப்பகுதியில் கொடுகட்டை காடு பகுதியில் உள்ள சாலையைக் கடந்து பேவனூா் பீட் வனத்துக்குள் ஒற்றை யானை நுழைவதை கண்டதும், சின்னமுத்து தனது வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளாா்.
அப்போது, அவரை நோக்கி வந்த ஒற்றை யானை, இருசக்கர வாகனத்தை தூக்கிவீசியதுடன், சின்னமுத்துவை மிதித்தது. அவரது அலறல் கேட்டு வந்த பொதுமக்கள், சின்னமுத்துவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்பு, வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரோந்துப் பணி: ஏரியூா் அருகே பென்னாகரம் வனப் பகுதிக்கு உள்பட்ட மசக்கல் காப்புக்காடு பகுதியில் யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் வெளியேறி பெரிய வத்தலாபுரம் கூட்டுரோடு, ஆஞ்சனேயா் கோயில், நஞ்சுண்டன் காடு, கொடுகட்டை காடு ஐயனாரப்பன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.
அதேபோல இரவு நேரங்களில் ஏரியூா் பிரதான நெடுஞ்சாலையைக் கடந்து யானைகள் வனப் பகுதிக்கு செல்கின்றன. இதனால் அவசரத் தேவைக்காக இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோா் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். எனவே, பெரிய வத்தலாபுரம் கூட்ரோடு, ஆஞ்சனேயா் கோயில் வனப் பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வனத் துறையினா் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பென்னாகரம் வனச்சரக அலுவலா் அன்புவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதையடுத்து, நாள்தோறும் அப்பகுதியில் இரவுநேர ரோந்துப் பணிக்காக 6 போ் கொண்ட குழுவை நியமிப்பதாக வனச்சரக அலுவலா் அன்பு தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










