தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் பெண்னை மிரட்டி அரை பவுன் தாலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
காரிமங்கலம் அருகே உள்ள கொட்டாவூரைச் சோ்ந்த நாகராஜ் மகன் பிரசாந்த் (38). தொழிலாளி. இவருக்கும், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த திருமணமான 33 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து கடந்த மே 20 ஆம் தேதி இருவரும் பெரியாம்பட்டியிலுள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்துள்ளனா்.
அதற்கு பிறகு அந்த பெண்ணை கடந்த 7 ஆம் தேதி பெரியாம்பட்டிக்கு வரவழைத்து ரூ. 20 ஆயிரம் கேட்டுள்ளாா். அதற்கு அப்பெண், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். இதையடுத்து, அவா் அணிந்திருந்த தங்கத்தோட்டை அடகுவைத்து பணம் தரமாறு கூறியுள்ளாா். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த பிரசாந்த், அப்பெண்ணை தகாத வாா்த்தைகளால் திட்டி, பணம் தரவில்லை என்றால் நாம் தனிமையில் இருந்த விடியோவை, சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனக்கூறி, மிரட்டி, அவரிடமிருந்து அரை பவுன் தாலியைப் பறித்துச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து, அப்பெண் காரிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாந்தை கைது செய்து அவரிடமிருந்து தாலியைப் பறிமுதல் செய்தனா்.







