ஒசூர் நகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைக்கும் திமுக அரசின் ஆணையை அமல்படுத்துமா அதிமுக அரசு?

ஒசூர், ஜூன் 10: ஒசூர் நகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைத்து திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆணையை, அதிமுக அரசு அமல்படுத்துமா? அல்லது கைவிடுமா? என்பது தெரியாததால் புதிய வார்டுகள் பிரிக்கும் பணி கிடப்பில் போ
Updated on
1 min read

ஒசூர், ஜூன் 10: ஒசூர் நகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைத்து திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆணையை, அதிமுக அரசு அமல்படுத்துமா? அல்லது கைவிடுமா? என்பது தெரியாததால் புதிய வார்டுகள் பிரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 தமிழக அரசாணை எண் 32, 31.01.2011-ல் வெளியிடப்பட்ட அரசிதழில், ஒசூர் நகராட்சியுடன் மத்திகிரி பேருராட்சி, சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, ஆவளப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஊராட்சிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிலாளர்களுக்கான தொழில்வரி சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்குச் சென்றடையும்.

 பெரும்பாலான தொழிலாளர்கள் நகராட்சியில் வசிப்பதால், 5 ஊராட்சிகளையும் ஒசூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டுமென நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே அப்போதைய தமிழக முதன்மைச் செயலாளர் அசோக் வரதன்செட்டி இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

 இதன்மூலம் ஒசூர் நகராட்சி, சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இந்த 5 ஊராட்சிகளை இணைத்து ஒசூர் சிறப்பு நிலை நகராட்சிக்கான தேர்தல் நடைபெறும். இதற்காக புதிய வார்டுகள் பிரிக்கவும் அந்த அணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது.

 இப்போதைய அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.முனிசாமி உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்ப்பு: இந்நிலையில் ஒசூர் நகராட்சியுடன் இணைக்க 5 ஊராட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசுக்கும் அதன் தீர்மான நகல் அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக, மூக்கண்பட்டபள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

 திமுக ஆட்சியில் வெளியிட்ட இந்த அரசாணையை அதிமுக அரசு அமல்படுத்துவதா? அல்லது கைவிடுவதா? என்று தெரியாததால் குழப்பமடைந்துள்ள அதிகாரிகள், ஒசூர் நகராட்சியில் புதிய வார்டுகள் பிரிக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.

 இதுகுறித்து நகராட்சி அணையர் என்.விமலா கூறியது:

 நகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டு, அரசிதழில் 31.01.2011-ல் வெளியிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய வார்டு பிரிக்கும் பணி நடைபெறும். இதுகுறித்து தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com