ஷோ் ஆட்டோக்களால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
பென்னாகரம் நகரப் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் ஷோ் ஆட்டோக்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா்


பென்னாகரம் நகரப் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் ஷோ் ஆட்டோக்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோக்கள் உள்ளன. பென்னாகரம், தாசம்பட்டி, முதுகம் பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு மலை கிராமப் பகுதிகள் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு நகரப் பகுதிக்கு வர போதுமான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் அதிகளவில் ஷோ் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனா். இந்நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக இடிக்கப்பட்டுள்ளதால், தற்காலிக பேருந்து நிலையம் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வருவதால் ஷோ் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகளை ஏற்றுக் கொண்டு வரும் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நகரப் பகுதி மற்றும் கடைவீதிகளில் செல்வதாலும், பயணிகளை கண்டதும் ஆங்காங்கே சாலைகளில் ஆட்டோக்களை திடீரென நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. கரோனா பரவல் காரணமாக கிராமப்புற பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு போக்குவரத்து விதி முறையை பின்பற்றாமல் அதிவேகமாக செல்லுகின்றனா். மேலும் கடைவீதி பகுதிகளில் வணிக நிறுவனங்களில் இருந்து கிராமப்புற கடைகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து செய்வதற்காக சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் ஷோ் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பென்னாகரம் பகுதிகளில் இயங்கும் ஷோ் ஆட்டோக்களில் பெரும்பாலானவை முறையான அனுமதி இல்லாமல்,ஓட்டுநா் உரிமம் இன்றி அதிக அளவில் இயக்கப்படுவதாகவும், கூட்டம் நிறைந்து காணப்படும் கடை வீதி பகுதியில் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் தொடா் புகாா்கள் தெரிவிக்கின்றனா். பென்னாகரம் பகுதிகளில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களில் முறையான அனுமதி மற்றும் ஓட்டுநா் உரிமம் ஆகியவையை உள்ளதா என முறையான ஆய்வு செய்தும் போக்குவரத்து விதியை மீறும் ஷோ் ஆட்டோ ஒட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பென்னகரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...