தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மொத்தம் 493 மனுக்களை அளித்தனா். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ நல வாரியத்தி பதிவு செய்த 37 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ அலுவலகத்தின் சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் 2 தூய்மைப் பணியாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகைகளையும், 13 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளையும் ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.