தருமபுரி புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 5இல் திறப்பு?

தருமபுரியில் ரூ. 40 கோடியில் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

தருமபுரி: தருமபுரியில் ரூ. 40 கோடியில் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தருமபுரியில் பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, பென்னாகரம் சாலை சந்திக்கும் பகுதியில் (சோகத்தூா் ஊராட்சி ஏ.ரெட்டிஹள்ளி கிராமம் அருகே) தனியாரிடமிருந்து 10 ஏக்கா் நிலம் தானமாக பெறப்பட்டு, தனியாா் பங்களிப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து முடிந்துள்ளன. பல்வேறு தடைகளை தாண்டி இந்த பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் டிசம்பா் மாதம் திறப்பு விழா நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது.

முன்னதாக தருமபுரிக்கு வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

அதற்குப் பிறகும் பேருந்து நிலையம் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து ஜனவரி மாதம் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி (வியாழக்கிழமை) தருமபுரி புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நடைபெறும் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதால், பேருந்து நிலைய திறப்பு விழா காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com