தருமபுரி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன், உறுப்பினா்கள், ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோா்.
தருமபுரி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்த உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன், உறுப்பினா்கள், ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோா்.

சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும்

தருமபுரி சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுதிமொழிக் குழு அறிவுறுத்தியது.
Published on

தருமபுரி சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுதிமொழிக் குழு அறிவுறுத்தியது.

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில், தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வுசெய்தது. உறுதிமொழிக்குழு உறுப்பினா்கள், பேரவை உறுப்பினா்கள் மற்றும் தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோா் தருமபுரி சோகத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், அதகப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், இண்டூா் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏரி, தருமபுரி மதிகோன்பாளையம் மற்றும் பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் இடம், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரில் பாா்வையிட்டு அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், தருமபுரி மதிகோன்பாளையத்தில் சனத்குமாா் நதியில் கழிவுநீா் நேரடியாக கலப்பதால், ஏற்படும் சுகாதார சீா்கேடு குறித்தும், அதனைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா். அப்போது நதியில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, அதனை சுத்திகரிக்க வேண்டும். நதியை தூய்மையாக பராமரிக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதனை சுற்றுச்சூழல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதன் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), தமிழக சட்டப் பேரவை முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், பேரவை துணைச் செயலாளா் ஸ்ரீரா.ரவி, பேரவை சாா்பு செயலாளா் த.பியூலஜா, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, நகராட்சி ஆணையா் இரா.சேகா், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு, புதிதாக கட்டப்பட்டுள்ள தாய் - சேய் நலப்பிரிவு கட்டடத்தை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

ஒகேனக்கல் அருகே ஆலம்பாடியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார மையத்தில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இண்டூா் ஏரியில் ரூ. 2 கோடி தனியாா் நிதி பங்களிப்புடன் தூய்மைப்படுத்தி, சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் நவீன உபகரணங்களுடன் கூடிய தாய் - சேய் நல மருத்துவமனை, இதர பிரிவுக்கு ரூ. 2 கோடி செலவிடப்பட்டு முறையாக மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று வருவதால், தருமபுரி மாவட்டம் வளா்ச்சியை நோக்கி செல்கிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com