தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சிங்கப்பெண் அதிரடிப்படையை முதல்வா் சி. ஜோசப் விஜய் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தாா். இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்தவகையில் தருமபுரி மாவட்டத்திலும் சிங்கப்பெண் அதிரடிப்படை புதன்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கான பிரத்யேக வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு முழுவீச்சில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் புதன்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை இப்படை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளாா்.
பென்னாகரத்தில் விழிப்புணா்வு பிரசாரம்...
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா், பெண்கள், மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் சரசு தலைமையிலான மூன்று போ் கொண்ட பெண் காவலா்கள் குழுவினா், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்கள், மாணவிகளிடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் தெரிவிக்க 1091, 112 என்ற இலவச எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.









