ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஒசூரில் அரசுப் பணிகள் முடங்கின. ஆசிரியர்கள் வராததால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள நகராட்சி ஆங்கில மொழி நடுநிலைப் பள்ளி, நகராட்சி தமிழ்மொழி நடுநிலைப்பள்ளி, கன்னட மொழி நடுநிலைப் பள்ளி மற்றும் தெலுங்கு மொழி நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 800 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். அதேபோன்று ஒசூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 5 ஆயிரம் மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். அரசு ஆசிரியர்கள் பணிக்கு வராததால் செவ்வாய்க்கிழமை திருப்புதல் தேர்வு விடைத்தாளை சேகரித்து தற்காலிக ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.
ஒசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சானசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்று ஒசூர் கல்வி மாவட்டம் முழுவதும் பல பள்ளிக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடைபெற்றது. சில பள்ளிகளில் மாணவர்கள் மட்டும் அமர்ந்து பயின்று விட்டுச் சென்றனர். ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், அஞ்செட்டி, சூளகிரி வட்டாட்சியர் அலுவலங்களும் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








