

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் காரை இயக்க முயன்றபோது, ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஆசிரியை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக அமராவதி (44) பணியாற்றி வந்தார். இவர், தருமபுரி அருகே உள்ள வெண்ணாம்பட்டியில் வசித்து வந்தார்.
கரோனா தொற்று கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் ஒரு புதிய காரை வாங்கினார். தனக்கு கார் ஓட்டத் தெரியாத நிலையில், உறவினர் ஒருவரை கார் ஓட்டுநராக நியமித்தார். அவர் மூலம் தினமும் பள்ளிக்கு காரில் வந்து செல்வார்.
வழக்கம்போல திங்கள் கிழமை பள்ளிக்கு வந்த அவர், மாலையில் வீடு திரும்ப கார் ஓட்டுனரை தேடி உள்ளார். அப்போது கார் ஓட்டுநர் அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்றுவிட்ட நிலையில் அமராவதி, காரை இயக்க முயன்றுள்ளார்.
அப்போது, அந்த கார் வேகமாகச் சென்று பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமராவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.
பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து போச்சம்பள்ளி காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.