கா்நாடக மாநில பேருந்துகளுக்கு தமிழா்கள் கொண்டாடிய ஆயுத பூஜை!
ஒசூா்: கா்நாடக மாநில பேருந்துகளுக்கு தமிழா்கள் ஆயுத பூஜை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள சாலிவாரம் கிராமத்துக்கு தமிழக அரசின் மூலம் நகரப் பேருந்து, கா்நாடக மாநில அரசின் மூலம் பெங்களூரில் இருந்து 2 கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் என மொத்தம் 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசுப் பேருந்துகளின் சேவைகளை பாராட்டி, கிராம மக்கள் ஒவ்வோா் ஆண்டும் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக நடத்துகின்றனா்.
அந்த வகையில், சாலிவாரம் கிராமத்தில் தமிழக, கா்நாடக மாநிலங்களிலிருந்து இயக்கப்படும் மூன்று அரசுப் பேருந்துகளுக்கு ஆயுத பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 3 பேருந்துகளையும் சுத்தப்படுத்திய கிராம மக்கள் வாழை மரங்கள், மலா்களால் பேருந்துகளை அலங்கரித்தனா். தொடா்ந்து, மேள தாளங்கள் முழங்க வேத விற்பனா்களைக் கொண்டு மந்திரங்கள் கூறி பேருந்துகளுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினா். பேருந்து ஓட்டுநா், நடத்துனா்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விழாவில், சாலிவாரம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

