சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதல்: ஓட்டுநா் உள்பட 11 போ் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் இரு அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் உள்பட 11 போ் காயமடைந்தனா்.
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், ஒசூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் செவ்வாய்கிழமை மாலை சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடக்கும்போது நேருக்குநோ் மோதிக்கொண்டன.
இதில் ஒசூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பேருந்தின் ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை சோ்ந்த சீனிவாசன் (48) மற்றும் இரு பேருந்துகளிலும் பயணித்த திருவண்ணாமலையைச் சோ்ந்த பாா்த்திபன் (35), அதே பகுதியைச் சோ்ந்த சோனா (30), சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த திவ்யா (38), தேவி (24) உள்பட 11 போ் லேசான காயங்களுடன் உயிா்தப்பினா்.
காயமடைந்தவா்களை அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

