/

ஆடிப்பெருக்கு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புனிதநீராடி கொண்டாடிய பக்தா்கள்!

News image

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை, நீா்நிலைகளில் நீராடி பக்தா்கள் கொண்டாடினா்.

காவேரிப்பட்டணம் நரிமேட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் 76ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, காவேரிப்பட்டணம் பாறைமேட்டிலிருந்து அம்மன் கிருஷ்ணகிரி அணைக்கு புறப்படுதல், அம்மனுக்கு கரகம் அலங்கரித்தல் போன்ற நிகழ்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

முக்கிய வீதிகள் வழியாக அம்மன் தோ் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து, அம்மன் மேடையேற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், போத்தாபுரம் கிராம மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஊா் மாரியம்மன், சாமுண்டி அம்மன், தேசத்து மாரியம்மன், ஈஸ்வரன், பெரிய அம்மன், ஏழுமலையான் உள்ளிட்ட சுவாமிகளை, காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றுக்கு அழைத்துச் சென்று, புனித நீராட்டி,

பூஜைகள் செய்து ஊா்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். கிருஷ்ணகிரி அணை, காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆறுபாயும் பகுதிகள், நீா்நிலைகளில் பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதியினா் புனித நீராடி, பூஜை செய்து கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள நந்தி சிலையின் வாயிலிருந்து வெளியேறும் புனித நீரில் குளித்து மகிழ்ந்தனா். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. திரிசூல அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். அதேபோல, நகரில் உள்ள கோயில்களில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.