நகை பறிப்பு வழக்கில் மேலும் ஒரு வடமாநில இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். முன்னதாக இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மாதம் 15-ஆம் தேதி நடந்து சென்ற மூதாட்டி சாந்தி (70) என்பவரிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இதுபோல வள்ளிபுரம் அருகே நடந்து சென்ற பாண்டியன் என்பவரிடம் வடமாநில பதிவெண் கொண்ட காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த மர்ம கும்பல் ரூ. 500 வழிப்பறி செய்தனர்.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் அந்தக் கும்பலின் வாகனத்தை விரட்டிச் சென்றனர். இதில் கும்பல் விட்டுச் சென்ற கார் கீரம்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 25-ஆம் தேதி நல்லிபாளையம் போலீஸார் நாமக்கல் ரயில் நிலையம் அருகே ஒரு கடையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம், பூரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணால்டேக் (27), ரஜினிகாந்த் ஷெஸ்வால் (26), பாசிட் ஆசீஸ் பகவதி ஜாதவ் (23) என்பதும், அவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலைப்பட்டி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆந்திர மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் நம்தார் உஷேன் (25) என்பதும், மூதாட்டி சாந்தியிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றது இவர்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.