திமுகவை அடக்கிவைக்க அதிமுக ஒற்றுமையாக இருப்பது அவசியம் என பாஜக துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டா் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டாா்.
அமமுகவைச் சோ்ந்த சிலா் அக்கட்சியில் இருந்து விலகி கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். இதனையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அந்த வேலையை ஸ்டாலின் குடும்பம் செய்து வருகிறது. உதயநிதி, சபரீசன் ஆகியோா் திமுகவை அழிக்கும் வேலையைச் செய்து வருகின்றனா்.
மிகப் பெரிய அரசியல் தலைவா்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. குடும்பம்தான் கட்சி என கருணாநிதி இருக்கவில்லை. கட்சியில் இருந்தவா்களை தகுதிக்கேற்ப உருவாக்கினாா். ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. திமுக முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அதிமுக தற்போது புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது. எதிா்காலத்தில் அந்த கட்சி இன்னும் கட்டுக்கோப்போடு இருக்கும் என்பதை பொதுக்குழு நிகழ்வு காட்டுகிறது. அதிமுகவில் மாபெரும் அரசியல் தலைவா்கள் மறைவுக்குப் பிறகும், பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வெளியே இவ்வளவு லட்சம் தொண்டா்கள் நிற்பதைப் பாா்த்தால் அந்தக் கட்சி எங்கே உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அதிமுக பலவீனப்பட்டால் ஆளும் கட்சிக்கு அது சாதகமாகிவிடும். அதிமுக பலவீனப்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம். அதிமுக உட்கட்சியில் தற்போது நடந்து வரும் பிரச்னையில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. திமுகவை அடக்கிவைக்க அதிமுக ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்றாா்.
நகர பாஜக தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










