அறிவிப்பு அரசாக மட்டுமே தமிழக அரசு செயல்படுகிறது: பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

நாமக்கல் அருகே கே.புதுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயில்
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை  (கோப்புப்படம்).
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை (கோப்புப்படம்).
Published on
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் அருகே கே.புதுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஆங்காங்கே மனநல மருத்துவமனைகள் தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன. மருத்துவமனைகளை காட்டிலும், கோயில்கள் நமக்கு நிம்மதியையும் ஆனந்தத்தையும் தருகின்றன. இன்று இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக வந்து உள்ளேன். கரோனா காலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 180 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  

பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொடர் பரலை கட்டுப்படுத்த பிரதமர் மேற்கொண்ட முயற்சி பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இதேபோல்தான் உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்பதும் பிரதமரின் பாராட்டுக்குரிய செயல்களில் முக்கியமானதாக என்றும் கருதப்படும். ஆளுனரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. 

வரும் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத்துக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில் புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். தற்போது மாநிலத்தின் முதல் குடிமகளாக உள்ளேன். அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும். இந்தியாவின் முதல் குடிமகளாக ஆகும் எண்ணம் இல்லை என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திமுக அரசு மத்திய அரசு செய்த காரியங்களை தாங்கள் செய்ததாகக் கூறி வருகிறது. உக்ரைனில் இருந்து 1860 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் மேற்கொண்ட தீவிர முயற்சியால் மட்டுமே இது சாத்தியமானது. தமிழக அரசு பெயரளவுக்கு குழுவை நியமித்து உக்ரைன் அருகே உள்ள நாடுகளுக்கு அனுப்பி விட்டு மாணவர்களை தாங்கள் மீட்டு வந்ததாக தெரிவித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு பல்வேறு பெயர்களை வைக்கலாம். அந்தவகையில் தற்போதைய அரசுக்கு அறிவிப்பு அரசு என்று மட்டுமே சொல்ல முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com