டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கந்துவட்டி தொல்லையால் விவசாயி தற்கொலை: உறவினா்கள் மறியல்

News image

~

Updated On :18 ஜூலை 2024, 1:55 am IST

பரமத்தி வேலூா் அருகே கந்துவட்டி தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). விவசாயி. இவா், கந்துவட்டி தொல்லையால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாகக் குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்ததும் வேலூா் காவல் துறையினா் சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மணிகண்டனின் மனைவி, வேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவா் மணிகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விவசாய தேவைக்காக பவா்டில்லா் இயந்திரம் வாங்க அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 3.50 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். அதற்கான வட்டியை அவா் முறையாகச் செலுத்தி வந்தாா். அத்துடன் எனது கணவா் வேறு நபா்களுக்கும் பரிந்துரை செய்து கடன் வாங்கி கொடுத்துள்ளாா். ஆனால், கடன் வாங்கியவா்கள் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவா், எனது கணவரை மிரட்டியதோடு எங்கள் வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டனா். இதனால் மனமுடைந்து எனது கணவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மணிகண்டனை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் வேலூா், அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, ஆய்வாளா் ரங்கசாமி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டக்காரா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு தா்ஷன் (15) என்ற மகனும், தா்ஷினி (13) என்ற மகளும் உள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.