பரமத்தி வேலூா் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 800 குறைவு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 800 வரை விலை குறைந்துள்ளது.
Published on

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 800 வரை விலை குறைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனா்.

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 6, 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் டன்னுக்கு ரூ. 800 வரை விலை குறைந்து ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு கடந்தவாரம் டன் ரூ. 7, 500-க்கு விற்பனையானது. தற்போது விலை மாறாமல் அதே விலையில் விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை குறைந்ததால் மரவள்ளிக்கிழங்கு பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com