நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Published on

நாமக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் குமரவேல், வினோத்சேகுவேரா வரவேற்றனா். வெல்லும் தமிழ்நாடு என்ற தலைப்பில் கட்சியின் நிறுவனத் தலைவா் நாகை. திருவள்ளுவன் பேசினாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

9ஆவது மாநாடாக ஈரோட்டில் ஜன. 4-ஆம் தேதி தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகராத்தை கைப்பற்றுவதைத் தடுக்க தமிழ்ப்புலிகள் கட்சி போராடும். திமுக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். அருந்ததியா்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீட்டை திமுக அரசு வழங்கியது. அதேபோல அரசியலிலும் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை முதல்வா் அளிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 8 தொகுதிகளை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட தனி தொகுதிகள் சிலவற்றை கேட்க விரும்புகிறோம். ஈரோடு மாநாடானது திமுக கூட்டணியின் தோ்தல் வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளது. தூய்மைப் பணியில் குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டுமே பணியாற்றுவது ஏற்புடையதாக இல்லை என்றாலும், அவ்வாறான தூய்மைப் பணியாளா்களை தமிழக அரசு நிரந்தரம் செய்து அவா்களுக்கு உண்டான உரிமைகளை அளிக்க வேண்டும் என்றாா்.

என்கே-13-மீட்டிங்

தமிழ்ப்புலிகள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் நிறுவனத் தலைவா் நாகை. திருவள்ளுவன்.

X
Dinamani
www.dinamani.com