ராசிபுரம் நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் மா. மதிவேந்தன்
ராசிபுரம் நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயா்த்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.


ராசிபுரம் நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயா்த்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
ராசிபுரத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன் தலைமை வகித்தாா். இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா்.
இதில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
ராசிபுரம் தோ்வுநிலை நகராட்சியாகவே இருந்து வருகிறது. இதை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தி, பின்னா் மாநகராட்சியாக மாற்றினால் கூடுதல் நிதி கிடைக்கும். அதன் மூலம் நகரில் பல அடிப்படை வசதிகளை செயல்படுத்த முடியும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ராசிபுரம் நகராட்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம், தினசரி சந்தை, முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவு பெறாத புதை சாக்கடை பணிகள், தரமான சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ராசிபுரம் அண்ணாசாலை பகுதியில் ரூ. 3 கோடியில் விளையாட்டு வசதிகள், ஜிம்வுடன் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:
ராசிபுரம் பகுதியில் புதிய குடிநீா்த் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. போதமலைக்கு புதிய மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. டைடல் பாா்க் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இதில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா், நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
படவரி...
விழாவில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையை வழங்கிய அமைச்சா் மா.மதிவேந்தன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...