ராசிபுரம் நகரச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக திருவிழா மற்றும் முகூா்த்த நாள்களில் நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், சில ஆண்டுகளுக்கு முன்பே ராசிபுரம் அண்ணாசாலை பகுதியை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தற்போது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வாகனங்கள் டி.வி.எஸ் சாலை, பட்டணம் சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சிவானந்தா சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைகின்றன. அங்கிருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, ஆட்டையாம்பட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்கின்றன.
இந்த வழித்தடத்தில் செல்வதால் பயணிகளுக்குக் கூடுதல் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவானந்தா சாலை, வீட்டு வசதி குடியிருப்பு, பட்டணம் சாலை, டி.வி.எஸ் சாலை வழியாகப் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் நலக்குழு நிா்வாகிகள் வலியுறுத்தி வந்தனா்.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி சு. விமலா ராசிபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தாா். மேலும், ஒருவழிப் பாதை போக்குவரத்து மாற்றம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
படவிளக்கம் 28எஸ்பி:
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்பி சு. விமலா.










