கெங்கவல்லியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது, 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கக் கூடாது, 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரிய, ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர், அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம் வந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், முருகன், சுந்தரராஜன், கார்த்திக்ராஜா, மணிமேகலை, கணேசன், சிவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
சங்ககிரியில்...
சங்ககிரி வட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை இணைச் செயலர் பி.மனோன்மணி ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் க.சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். வட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.பசுபதி, நிர்வாகிகள் முருகன், நல்லம்மாள், கே.ராஜேஷ், எஸ்.சுகுமார்,சங்கர், பி.வாசு, ஜெ.கணேஷ், எம்.ஆறுமுகம், பி.பழனிவேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சங்ககிரி வட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட 1,450 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை சங்ககிரியில் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர்கள் வி.சி.முருகேசன், ராஜேந்திரன், சிவக்குமார், மூத்த நிர்வாகிகள் கோ.முருகேசன், கணேசன் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி சண்முகம், ஆசிரியர்கள் சிவ.எம்கோ, குமார், மகளிரணி நிர்வாகிகள் ஷபீராபானு, சத்தியக்குமாரி, ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








