அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டம் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் சேலம் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது, இந்த கூட்டத்தில் உங்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சகோதரரை பார்க்க ஆவலோடு கூட இருப்பது அதிமுகவில் மட்டுமே. இந்த கூட்டம் போதும் வருகிற தேர்தலில் நாம் வெற்றியடைய. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது. நீங்கள் முழுமனதுடன் முனைப்பாக செயல்பட வேண்டும். 2016-ல் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. சொல்வதை செய்கிற அரசாக திகழ்ந்து வருகிறது.
உள்ளாட்சியிலே மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக ஜெயலலிதா அறிவித்து மறைந்தாலும் அவருடைய கனவை தமிழக அரசு செய்து காட்டியுள்ளது என்றார்.