/

ஆனைமடுவு அணையின் உபரிநீரை பாசன வாய்க்காலில் திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகை

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதியில் திறக்கப்படும் உபரிநீரை, பாசன வாய்க்கால்களில் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அணையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:44 pm

DIN

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதியில் திறக்கப்படும் உபரிநீரை, பாசன வாய்க்கால்களில் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அணையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25 அடி உயரத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 65.50 அடியை எட்டியது.

இதனையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் 110 கனஅடி தண்ணீரையும் இரு தினங்களாக வசிஷ்ட நதியில் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள ஏரி, குளம், தடுப்பணைகள் நிரம்பி விட்டதால், வசிஷ்டநதியில் திறக்கப்படும் உபரி நீா் பயன்பாடின்றி சென்று கடலில் கலக்கிறது. எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் நலன் கருதி, உபரி நீரை வசிஷ்டநதியில் திறந்து விடுவதை நிறுத்தி விட்டு, அணையின் வலது மற்றும் இடது பாசன வாய்க்காலில் திறந்துவிட்டால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து பாசனத்துக்கு வழிவகை ஏற்படுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால், குறிச்சி, கோணஞ்செட்டியூா், ரங்கனூா், நீா்முள்ளிகுட்டை, கோலத்துகோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரப்பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், உபரிநீரை பாசன வாய்க்காலில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வியாழக்கிழமை புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா் மற்றும் பொதுப்பணித்துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசு அனுமதி பெற்று வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.