வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி
வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், வனவாசி பேரூராட்சி பகுதியில் 6635 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் விவசாயிகளும் நெசவாளர்களும் அதிகம் உள்ளனர். பேரூராட்சி என்றாலும் கிராமம் போலவே இப்பகுதி உள்ளது. கரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்தாலும் சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வீடுகளிலேயே முடங்கி கிடகக்கின்றனர். இதேபோல் வாகன வசதி இல்லாத காரணத்தாலும் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.
இதேபோல் மாற்றுத் திறனாளிகள் முகாம்களுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வனவாசி பேரூராட்சி செயல் அலுவலர் ந.கோபிராஜா வனவாசி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் இந்திராணி மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி மருந்துகளுடன் வீடு வீடாகச் சென்று முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தினார்கள்.
இதையும் படிக்க- பூண்டி ஏரியிலிருந்து 1000 கனஅடி உபரி நீர் திறப்பு
அச்சத்தின் காரணமாக தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று பேரூராட்சி குதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இயல்வாகை, வேங்கை, மஞ்சள்கடம்பை, மகாகணிவகை மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்டன.
மரகன்றுகள் பெற்றவர்களின் பெயர் முகவரி மற்றும் தொலை பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. பின்னர் மரக்கன்றுகள் வளரும் வரை கண்காணிக்கப்படும் என்றும் வனவாசி பேரூராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் வனவாசி பேரூராட்சி செயல் அலுவலர் ந.கோபிராஜா தெரிவித்தார்.