மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனு அளித்த சிறிது நேரத்திலேயே சிறப்பு சக்கர நாற்காலி வழங்கியதோடு, அவரை நாற்காலியில் அமரவைத்து வாசல் வரை தள்ளி வந்து வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சேலம் ஆட்சியர் செ.கார்மேகம்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி டேனிஸ்பேட்டை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ் (22). இவருக்கு பிறவியிலேயே இரு கைகள் மற்றும் இரண்டு கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளி ஆவார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தார். உடனே அவரது மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், உடனடியாக அவருக்கு சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார். பின்னர் வரதராஜை சிறப்பு சக்கர நாற்காலியில் ஏற்றிவைத்து ஆட்சியர் செ.கார்மேகம் வாசல்வரை தள்ளி வந்தார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனிடைய மனு அளித்த உடனேயே இரு சக்கர சிறப்பு வாகனத்தை வழங்கிய ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி வரதராஜ் நன்றி தெரிவித்தார்.