சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஊர் பொதுமக்களின் சார்பில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் மஹா சிவராத்திரியையொட்டி பூஜைகள் தொடக்கமாக பசுவிற்கு கோ மாதா பூஜை செய்யப்பட்டது. மேலும் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி உடனமர் வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து கோயில் வளாகத்தில் 108 சிவலிங்கம், 108 கலசங்கள், 1008 சங்கு, 10008 ரூத்ராசைகள் வைக்கப்பட்டு சிவ அர்ச்சனைகளுடன் சிறப்பு பூஜைகள் மாலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மேலும் புதன்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனர்.