சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார்.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழாவினையொட்டி மே 6-ம் தேதி உற்சவமூர்த்தி சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து சுவாமிகள் தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர்.
மே 14-ம் தேதி சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னர் பல்வேறு மண்டப கட்டளை வழிபாட்டிற்கு பின்னர் சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக மலைக்கு திரும்பினார்.
முன்னதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி செல்ல அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் சென்றனர். பக்தர்கள் வழியெங்கும் தேங்காய், பழங்கள், நாட்டுச்சர்க்கரையுடன் கூடிய பொட்டுக்கடலை ஆகியவைகளை படைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். மலையடிவாரம் பகுதியில் பக்தர்கள் மலைக்கு செல்பவர்களுக்கு அன்னதானம், குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினர்.
மலையடிவராத்தில் 2-வது மண்டபத்தில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தேங்காய்களை தரையில் உடைத்து கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கியவாறு சுவாமிகளை வழியனுப்பி வைத்தனர். பக்தர்கள் அதிகளவில் சுவாமிகளுடன் மலை ஏறினர்.
மலை மீது இன்றிரவு வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் வாணவெடிகளுடன் நடைபெற உள்ளன.