காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவரில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்டு சாலையில், மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவர் சொந்தமாக நகை அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று மீண்டும் கடையை திறக்க வந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர்கள் நகை அடகு கடை பக்கத்தில் உள்ள பழச்சாறு கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று பின் நகை அடகுக் கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே சென்று நகை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை உடைத்து அதிலிருந்த வெள்ளி நகை, பொருட்கள் மற்றும் தங்க நகைகள் என சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து திருவலம் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ADSP சுந்தரமூர்த்தி, காட்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் உதவியுடன் விசாரணை நடபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயன்ற போது கொள்ளையர்கள் சிசிடிவி ஆர்ட் டிஸ்க்கையும் கேமராவையும் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன், லத்தேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டு ஆண்டுக்கு முன்னர் இதே போன்று இதே நபரின் கடை மேல்பாடியில் திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.