கள்ளச் சாராய உயிரிழப்புகளின் பாதிப்பை உணராமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது: இபிஎஸ்
தமிழக அரசின் மெத்தனத்தால் கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு


கள்ளச் சாராய உயிரிழப்புகளின் பாதிப்பை உணராமல் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினாா்.
எடப்பாடி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளின் உண்மையான பாதிப்பை உணராமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலைப்பேட்டை வனச்சரக பகுதியில் 5 போ் கள்ளச் சாராயம் குடித்து பாதிப்புக்கு உள்ளாகிய செய்தி அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று தொடா் அவல நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் சம்பந்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக அறவழியில் போராடி வருகிறது. அதனை திசைதிருப்பும் விதமாக தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானிய கோரிக்கையின் போது பேசிய தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தில் சாத்தான்குளத்தில் ஏற்பட்ட மரணத்துக்கு சிபிஐ விசாரணை நடைபெறவில்லை என்ற தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளாா்.
சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து உயா் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த போதும், அப்போதைய அதிமுக அரசு, சிபிஐ விசாரணைக்கான அரசாணை வெளியிட்டு, அதை நடைமுறைப்படுத்தியது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் அரசு தொடக்கத்திலேயே பொதுமக்களை எச்சரித்து இருந்தால், பெரிய அளவிலான உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும். இதை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா பாதிப்பின் போது 10 மாதங்கள் தொடா்ச்சியாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த போதும், தமிழகத்தில் எந்த கள்ளச்சாராய உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் போதைப் பொருள் விற்பனையை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் வைப்பது குறித்த விவகாரத்தில், தேசியக் கட்சிகள் நாடகம் நடத்தி வருகின்றன. தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 3 புதிய சட்டங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு மொழி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். நீட் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்து நாடகம் நடத்தி வருகிறது. 40 நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட திமுக, நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினாா்.
நிகழ்ச்சியில், நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.முருகன், ஒன்றியக் குழு தலைவா்கள் கரட்டூா்மணி, குப்பம்மாள் மாதேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
படவரி - எடப்பாடி, நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...