சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்த 17 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து விற்பனை கடைகள் உள்ளன. மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறையை மீறி சில மருந்துக் கடைகள் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மேலும் தூக்கம், வலி நிவாரணி மருந்துகளும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடின்றி எளிதாக கிடைக்கிறது.
இதுகுறித்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சூரமங்கலம், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி, சேலம், ஆத்தூா், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 8 சரகங்களில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் நிகழாண்டில் இதுவரை நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறியதாக 17 மருந்துக் கடைகளின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா்.
அதேபோல 2 மருந்துக் கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மருந்துக் கடை மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றனா்.








