அமாவாசை, வார விடுமுறை: சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மாா்கழி அமாவாசை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

மாா்கழி அமாவாசை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி. குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும் மற்றும் தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 1,900 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

வார இறுதி நாள் மற்றும் அமாவாசையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்: வரும் 19 ஆம் தேதி சேலம், தருமபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூா், மாதேஸ்வரன் மலை ஆகிய இடங்களுக்கு தேவைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயில்களுக்கு தேவைகேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com