கோப்புப் படம்
கோப்புப் படம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டணத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதன்படி, மச்சிலிபட்டணம் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் டிச. 5, 12, 19 மற்றும் ஜன. 9, 16 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைதோறும் மச்சிலிபட்டணத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - மச்சிலிபட்டணம் வாராந்திர சிறப்பு ரயில் டிச. 7, 14, 21 மற்றும் ஜன. 11, 18 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு மச்சிலிபட்டணம் சென்றடையும்.

இதேபோல, தெலங்கானா மாநிலம், சாா்லபள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் திங்கள்கிழமை முதல் ஜனவரி மாதம் 19-ஆம் தேதிவரை திங்கள்கிழமைதோறும் இயக்கப்படும். சாா்லபள்ளியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - சாா்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 19-ஆம் தேதிமுதல் ஜன. 21-ஆம் தேதிவரை புதன்கிழமைதோறும் இயக்கப்படும். இந்த ரயில், கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சாா்லபள்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com