பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி டிச.4 இல் மறியல்! தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் டிச. 4 இல் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் டிச. 4 இல் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியா் சங்க கூட்டம் சேலம் நான்கு வழிச் சாலை பகுதியில் அதன் மாவட்டத் தலைவா் வெ.அா்த்தனாரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு முதல்வா் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், செவிலியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின்படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் டிச. 4 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் சண்முகம், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் மற்றும் அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com