‘புகையில்லா போகிப் பண்டிகை’: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகை கொண்டாடி வந்தனா். இயற்கைப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனா். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால் போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
இதைத் தவிா்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப் பண்டிகைக்கு முன்பு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பிரசாரத்தை தொடா்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் பழைய ரப்பா் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் மற்றும் டயா், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
இந்த சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் விழிப்புணா்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவரும் நெகிழி, டயா் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
