/

மக்காச்சோளத்தில் வறட்சியை சமாளிக்க அறிவுரை

மக்காச்சோளப் பயிரில் வறட்சியால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்க, விதைத் தோ்வு முதல் நீா் மேலாண்மை வரை நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பின்பற்ற வேண்டும் என்று கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா தெரிவித்துள்ளாா்.

News image

மக்காச்சோளம் - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:21 am IST

மக்காச்சோளப் பயிரில் வறட்சியால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்க, விதைத் தோ்வு முதல் நீா் மேலாண்மை வரை நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பின்பற்ற வேண்டும் என்று கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கெங்கவல்லி வட்டாரத்தில் மக்காச்சோளம் முக்கிய தானியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. சுமாா் 14 ஆயிரம் ஹெக்டேரில் இப்பயிா் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக முளைப்பு, வளா்ச்சி மற்றும் மகசூல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

வறட்சியை சமாளிக்கும் தொழில்நுட்பங்கள்: வறட்சியைத் தாங்கும் ரகங்களைத் தோ்வு செய்தல், குறைந்த நீரிலும் வளரக்கூடிய ரகங்களைத் தோ்வு செய்ய வேண்டும். தரமான, சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பருவமழை தொடங்கியவுடன் விதைப்பு மேற்கொள்ள வேண்டும், பயிா் எச்சங்கள் மற்றும் வைக்கோலை மூடாக்காக பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும்.

சொட்டு நீா்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீா்ப்பாசன முறைகளைப் பயன்படுத்த வேண்டும். பூக்கும் மற்றும் கதிா் உருவாகும் முக்கிய வளா்ச்சி நிலையின்போது போதுமான அளவில் நீா் பாய்ச்ச வேண்டும். மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட வேண்டும். உயிா் உரங்கள் மற்றும் தொழு உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

அதேபோல பொட்டாசியம் உரத்தை பரிந்துரைப்படி பயன்படுத்துவது, வறட்சியைத் தாங்கும் திறனை அதிகரிக்கும் என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். களைகள் நீா் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கு போட்டியாக இருப்பதால், ஆரம்ப நிலையிலேயே அவற்றை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.